பூலாம்வலசு கிராமத்தில் நடந்த சேவல் சண்டையில் 15 ஆயிரம் சேவல்கள் கலந்து கொண்டன. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் நடைபெறும் சேவல் சண்டை மிக பிரசித்தி பெற்றது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சேவல் சண்டை நடந்து வருகிறது. பொங்கல் தினத்தில் இருந்து 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறும்.
முதல்நாள் போட்டி நேற்றுமுன்தினம் காலை தொடங்கியது. திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, சேலம், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. முதல் நாளில் மட்டும் 10 ஆயிரம் சேவல்கள் வந்தன.
இரண்டு சேவல்கள் மோதும்போது கீழே சாய்ந்து விழுந்த சேவல், அல்லது தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பி ஓடும் சேவல் தோல்வி அடைந்ததாக அர்த்தம். தோல்வி அடைந்த சேவலை, வெற்றி பெற்ற சேவலின் சொந்தக்காரருக்கு கொடுத்து விடவேண்டும். தோல்வி அடைந்த சேவலை அந்த பகுதியிலேயே சிலர் சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். சிலர் வீட்டிற்கு எடுத்து செல்வார்கள்.
தர்மபுரி, கேரளா போன்ற தொலை தூரத்தில் இருந்து வந்துள்ளவர்கள் இங்கேயே சமைத்து சாப்பிட்டு 3 நாட்கள் தங்கி இருப்பார்கள். நேற்று காலை 2ம் நாள் போட்டிகள் தொடங்கியது. காலையிலேயே 5 ஆயிரம் சேவல்கள் போட்டிக்கு வந்திருந்தன. மாலை 6 மணி வரை போட்டி நடந்தது. 2 நாட்கள் நடந்த சேவல் சண்டையை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். இவர்கள் ஆங்காங்கே குழு, குழுவாக நடந்த போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சேவல் சண்டை இன்றும் நடக்கிறது.
No comments:
Post a Comment